லண்டனில் உள்ள பேய்ஸ் பிசினஸ் யுனிவர்சிட்டியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அப்போது ஆதிஷ் ஆர் வாலி என்ற இந்திய மாணவர் பட்டப்படிப்பு சான்றிதழை வாங்கச் சென்றபோது அவரது மாநிலமான கர்நாடகாவின் கொடியை தனது சட்டைப் பையில் இருந்து எடுத்து உயர்த்தி காட்டி நன்றி தெரிவித்தார்.
இது தொடர்பான வீடியோவை அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், "நான் லண்டன் சிட்டி யுனிவர்சிட்டியின் பேயஸ் பிசினஸ் ஸ்கூலில் மேலாண்மை துறையில் பட்டம் பெற்றுள்ளேன். நான் அந்த விழாவின் கர்நாடக மாநில கொடியை ஏந்தினேன். அது ஒரு பெருமித தருணம்" என்று பதிவிட்டு உள்ளார்.
ஆதிஷ் வெளியிட்டுள்ள இந்த வீடியோ ஜனவரி 21 ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த பகிர்வின் கீழ் கருத்து தெரிவித்துள்ள ஒருவர் "இந்திய கொடியைத் தான் ஏந்தியிருக்க வேண்டும்" என்று பதிவிட, அதற்கு பதிலளித்த மற்றொருவர், "கர்நாடகா இப்போதும் எப்போதும் இந்தியாவின் மகள் தான். இந்திய தேசத்தின் மீது எங்களின் பற்றை யாரும் கேள்விக்குறியாக்க வேண்டாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.