திண்டுக்கல் - தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. வங்கியில் இன்று 24.01.2023 காலை நான்கு பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது உள்ளே வந்த மர்ம நபர் கையில் மிளகாய் பொடி, ஸ்பிரே, கட்டிங் பிளேடு உட்பட ஆயுதங்களுடன் உள்ளே சென்றுள்ளார்.
பணியில் இருந்த ஊழியர்கள் மீது மிளகாய் பொடி தூவி ஸ்பிரே அடித்துள்ளார். பின்னர் தான் கொண்டு வந்த கயிற்றால் வங்கி ஊழியர்கள் 3 பேரை கையை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்ற போது வங்கி ஊழியர் ஒருவர் வெளியே ஓடி வந்து பொதுமக்களை பார்த்து கொள்ளை கொள்ளை என கூச்சலிட்டு அழைத்ததார். பின்னர் பொதுமக்கள் வங்கியில் உள்ளே சென்றனர். இதனையடுத்து பொதுமக்கள் உதவியுடன் குற்றவாளி பிடித்தனர்.
இதனை அடுத்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மர்ம நபரை பிடித்து விசாரித்ததில் திண்டுக்கல் பூச்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த கலீல் ரகுமான் (வயது 25) என்பது தெரிய வந்தது.இதையடுத்து கொள்ளையடிக்க முயன்ற கலீல் ரகுமானை திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விசாரணையில் வாழ்க்கை வெறுத்து விட்டதாகவும் அதனால் சினிமாவை பார்த்து தான் கொள்ளையடிக்க முயற்சி செய்ததாகவும் தற்போது வந்துள்ள துணிவு படம் உட்பட அனைத்து படங்களையும் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். பகல் நேரத்தில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் சாலையில் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்ததால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.