புதுச்சேரி வில்லியனூர் பத்துக்கண்ணு சாலை பிரதான சாலையாக உள்ளது. தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் இச்சாலை வழியாக சென்று வருகிறது. இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளாக இச்சாலை சீரமைக்கப்படாததால் ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. சில இடங்களில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஒட்டிகள் தினமும் சாலையில் உள்ள பள்ளத்தில் விழுந்து ரத்தக்காயங்களுடன் செல்கின்றனர்.
இந்தநிலையில் சேந்தநத்தம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (60) இவர் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் இச்சாலையில் செல்லும் போது பள்ளத்தில் விழுந்து பிரேக் போட்டுள்ளார் அப்போது பின்பக்கமாக வந்த பைக் மோதி கீழே விழுந்துள்ளார். இதனால் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது ேபரன் மாசிலாமணி (13) என்ற சிறுவன். இவர் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். தனது தாத்தா விழுந்த பள்ளத்தில் மற்றவர்கள் யாரும் விழுந்து அடிப்படக்கூடாது, ஏதேனும் உயிர் சேதம் ஏற்படக்கூடாது என்று எண்ணி இன்று காலை சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்.
எத்தனையோ பணக்காரர்கள், அரசியல் வாதிகள் சென்றுவரும் இச்சாலையில் ஒரு சிறுவன் தனி ஒரு ஆளாய் நின்று ஆங்காங்கே கிடக்கும் சிமெண்ட் கற்கல், சாலையோரம் உள்ள மணல் ஆகியோவற்றை போட்டு சுத்தியால் தட்டி தண்ணீர் ஊற்றி மட்டம் செய்து சாலையை சீரமைத்துள்ளார். சிறுவனின் இச்செயலை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சிறுவனை பாராட்டிவிட்டு சென்றனர்.
ஒரு சிறுவனின் இத்தகைய செயல் அரசுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. எனவே உடனடியாக இச்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.